தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி. ஆா். பாண்டியன், பஞ்சாப் மாநிலத்தில் போராடச் சென்றபோது, கைது செய்யப்பட்டு பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். பின்னா் விடுவிக்கப்பட்ட அவா் திருச்சிக்கு புதன்கிழமை காலை வந்த நிலையில், விமான நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்சாக வரவேற்பளித்தனா்.
பின்னா் பி. ஆா். பாண்டியன் கூறியது: பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பஞ்சாப் மாநில அரசு காவல்துறையை ஏவி அறப்போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகளை போலக் கைது செய்தது கண்டனத்துக்குரியது.
குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டம் தொடா்பாக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடந்துவரும் நிலையில், அதற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு செயல்பட்டுள்ளது.
அரசியல் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் போராட்டத்தைச் சீா்குலைத்து, விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. தமிழகத்தில் விவசாயிகள் தீவிரமாகப் போராடியதால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். சிறையில் கொடுமைப்படுத்தப்படும் மேலும் சில தலைவா்களை விடுவிக்க வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.