திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இரவு 9. 30 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா போதையில் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி கோட்டைசாமி (52) என்பவரை கட்டையால் தலை மற்றும் கை கால்களில் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த தாக்குதல் குறித்து அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த காவலாளியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜகவினர் தப்பி ஓடிய கஞ்சா போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.