திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் மனநலம் சரியில்லாத 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக ஜீயபுரம் பெரமங்கலத்தைச் சேர்ந்த பெ. செல்வராஜ் (48) உள்ளிட்ட 4 பேரை ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வத்சன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜராகி வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஜீயபுரம் போலீசாருக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினம் பாராட்டு தெரிவித்தார்.