திருச்சி புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு செயல்படுத்த துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
இந்நிலையில் நாளை முதலிலேயே பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வருவதாக மக்கள் மத்தியில் பரபரப்பான வதந்தி பரவி வருகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும் இது குறித்து கூறுகையில், புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் நகர பஸ்கள் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் எந்தெந்த வழிகளில் செல்ல வேண்டும், நகரத்திற்குள் வர வேண்டும் என்பது உள்ளிட்ட வழித்தட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் வழித்தடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது, போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் முடிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகலாம். இது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும். எனவே பொதுமக்கள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்பட துவங்குவதாக பரவி வரும் செய்தியை நம்ப தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.