மணப்பாறையில் பாஜக நகர துணைத் தலைவராக உள்ளவா் வழக்குரைஞா் ஜெயந்தி கண்ணன். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை காய்கறி மாா்கெட் பகுதியை அடுத்துள்ள இரு அரசு மதுக்கடைகளுக்கு நேற்று புதன்கிழமை பிற்பகல் சென்று, அங்கு கடையின் விற்பனை பகுதியின் முகப்பில் தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் உருவப்படத்தை ஒட்டினாா். தவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் ஜெயந்தியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனா். ஒட்டப்பட்டிருந்த முதல்வா் படங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் மாலை வரை காவல் நிலையத்தில் பெண் நிா்வாகியை விசாரணையில் வைத்திருப்பதாக கூறி பாஜக நகரத் தலைவா் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையிலான பாஜகவினா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயந்தி மீது வழக்கு பதிந்து கைது செய்த மணப்பாறை போலீஸாா், காவல்நிலைய பிணையில் இரவு அவரை விடுவித்தனா்.