தூத்துக்குடியில் நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறிவிழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி, தாளமுத்து நகர், தாய் காலனி சுனாமி நகரை சேர்ந்தவர் சேசையா மகன் அண்டோ (47). மீனவர். இவர் நேற்று காலை திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் 8 பேருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் கடலில் தவறி விழுந்தார். உடனடியாக படகில் இருந்த சக மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்து தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பேக்கிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.