ஆல்கஹாலிக் அனானிமஸ் என்ற மறுவாழ்வு குழுவின் 9ம் ஆண்டு விழா மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் 07. 10. 2023 மற்றும் 08. 10. 2023 ஆகிய 2 நாட்கள் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள மலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (08. 10. 2023) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போதை பழக்கத்திலிருந்து வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வித்தாகும். நமது வாழ்க்கையின் அணுகுமுறையை நல்ல பாதையில் மாற்றிக் கொண்டாலே நமது வாழ்க்கை சிறப்பாக அமையும். நமது உடலை பேணி காப்பது நமது முக்கிய கடமையாகும். வாழ்க்கையில் நாம் சுய மரியாதையுடன் நடந்து கொண்டாலே வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.
எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி, அதற்கென ஒரு எல்லை, கட்டுப்பாடு மற்றும் அதை எவ்வாறு விளையாட வேண்டுமென விதிமுறைகள் உள்ளதோ, அதை கடைபிடித்து விளையாடினால் மட்டும்தான் வெற்றி இலக்கை அடையமுடியும், அதுபோல நமது வாழ்க்கையிலும் நமக்கென்று கட்டுப்பாடு மற்றும் நல்ல விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு அதை கடைபிடித்தால்தான் உயர்ந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக திகழ முடியும்.