தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து விஜய் தன் கைப்பட எழுதிய கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் நகலெடுத்து கல்லூரிகள் மாணவிகள், பொதுமக்களிடம் வழங்கி வந்தனர். சென்னையில் தடையை மீறி விநியோகம் செய்த கட்சியின் பொதுச் செயலாளர் புஷ்பா ஆனந்த் உட்பட மகளிர் அணியினரை போலீசார் தினகரில் வைத்து கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பலர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.