தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் பலத்த மழை பெய்தது சுமார் 4 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி, மருத்துவமனையில் முக்கியமாக உள்ள குழந்தைகள் வார்டு, இரத்த வங்கி, காய்ச்சல் பகுதி, மனநலப்பிரிவு, சமையலறை பகுதி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி முழுவதும் தெப்பக்குளம் போல் காணப்பட்டது.
இதன் காரணமாக இந்த மழை நீரிலே நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக மிகவும் சிரமம் அடைந்து வரும் பொதுமக்கள், சிறிய மழை பெய்தாலே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதை முறையாக பராமரித்து மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.