தூத்துக்குடியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த பொக்லைன் எந்திரம் மீது வேன் மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் முத்து (60). இவர் அதே பகுதியை அய்யப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு செல்வதற்காக கடந்த 4-ந் தேதி வேனில் திருச்செந்தூருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர்கள் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் வந்தபோது, சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி பொக்லைன் எந்திரத்தில் வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் முத்து படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் (ஜனவரி 8) அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.