தூத்துக்குடி வ. உ. சி. துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான 40-வது கபடிப் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இப்போட்டியில் தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவர்ஹர்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூர் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.
இதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 47-41 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. 3-வது இடத்தை தூத்துக்குடி அணியும், பாரதீப் அணியும் பெற்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வ. உ. சி. துறைமுக ஆணையர் தலைவர் சுசாந்த குமார் புரோகித், அவருடைய மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினர்.