தூத்துக்குடியைச் சார்ந்த அரசு ஊழியரான ராபர்ட் கென்னடி என்பவர் தமிழ்நாடு அரசின் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் வேலூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு சிகிச்சைக்கு சேரும் போது பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் சேருவதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 1,06,203 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,00,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 2,16,203 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.