தூத்துக்குடி: மாநகராட்சி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

78பார்த்தது
தூத்துக்குடி: மாநகராட்சி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் மகாராஜன் (33). இவரது மனைவி நேசமணி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகராஜன் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் விபத்தில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரை மகாராஜன் மனைவி நேசமணி சென்று பார்க்கவில்லையாம். இதனால் நேற்று இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனையடைந்த மகாராஜன் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மகாராஜனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி