தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஸ்ரீதேவ் (8), இரண்டரை முக்கால் வயது பெண் குழந்தை ஆதிரா ஆகியோர் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தாத்தாவின் வீட்டில் உள்ளார்.
இந்நிலையில் பார்வதி தனது மகள் ஆதிராவுடன் நேற்று மாலை வீட்டில் படுத்திருந்தாராம். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்தபடி, பார்வதியிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றதாகவும், அப்போது குழந்தை மூச்சுத்திணறியதால் அந்த நபர் குழந்தையையும், சங்கிலியையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சிறுமி ஆதிரா மரணத்தில் தாய் பார்வதி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். பார்வதி கடந்த ஓராண்டாக லேசாக மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் தனியார் மனநல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.