ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி அத்தியன திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.
இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 8 மணிக்கு அலங்காரம், காலை 9.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான் ஸ்ரீ தேவி, பூதேவி, வைகுண்ட நாயகி, சோரநாத நாயகி அம்பாள்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். காலை 11 மணிக்கு திருப்பல்லாண்டு தொடங்கியது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்க சேவை, இரவு 7 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு 8.30 மணிக்கு பல்லக்கில் ராஜாங்க சேவை நடைபெற்றது.
இதில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் முருகன் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு இரவு 9 மணிக்கும் ஒவ்வொரு திருக்கோலங்களில் சுவாமி கள்ளப்பிரான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 10-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியில் பகலில் சயனக்திருக்கோலம், மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.