பாளையங்கோட்டை மத்திய சிறையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (41). தொழிலாளி. இவர், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாரிமுத்துவிற்கு தூத்துக்குடி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு மாரிமுத்துவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில், வரும் வழியிலேயே மாரிமுத்து இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.