தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒத்தவீடு சுனாமி காலனி பகுதியில் நின்றுகொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மேலூரைச் சேர்ந்த மந்திர மூர்த்தி மகன் மகராஜன் (21), மாதவன் காலனி இசக்கி முத்து மகன் சந்தனராஜ் (18) எனத் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல் சிலுவைப்பட்டி விநாயகர் கோவில் உப்பு சங்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தாளமுத்துநகர் சுனாமி குடியிருப்பு உத்தாண்ட ராமன் மகன் சரவணவேல் (19), ஜாகிர் உசேன் நகர் ரமேஷ் மகன் அஸ்வின் (19), சிலுவைபட்டி மேற்கு சுனாமி காலனி இசக்கிமுத்து மகன் சுப்பிரமணியன் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 25 கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.