திருநெல்வேலி சரக அளவிலான 29வது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு இடையேயான 29வது சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு கொடிஅணிவகுப்பு, 100மீட்டர் ஓட்டப்பந்தயம், 400மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் முதலிடத்தையும் ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
மேற்படி சரக அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஊர்காவல்படை வட்டார தளபதி பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.