தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். ரூ. 1. 25லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜன் மற்றும் போலீசார் நேற்று கூட்டாம்புளி பாலம் அருகில் வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் மாரிராமர் (35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மாரிராமரை கைது செய்து அவரிடமிருந்த ரூ. 1லட்சத்து 25ஆயிரம் மதிப்புள்ள 95 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.