தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, 'மாதம் ரூ. 11 கோடி வசூலிக்கும் நிலையில் சாலை பராமரிப்புக்கு ரூ. 30 லட்சம் மட்டுமே செலவு செய்வதாக' தொடர்ந்த வழக்கில், மதுரை - தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அதிரடியாக கடந்த 3-ந்தேதி தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். பாலகிருஷ்ணன் சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி, அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. உரிய பராமரிப்பு இல்லாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம் மதுரை-தூத்துக்குடி இடையிலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த உயர்நீதிமன்றம் தடையை நிறுத்திவைத்தது. மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.