தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கானபயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கு பி. எஸ். சி/எம். எஸ். சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட்பேசிக் பி. எஸ். சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 3. 00 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www. tahdco. com என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.