தூத்துக்குடியில் புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மதுவிலக்கு சபை சார்பில் மாவட்ட காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மறைமாவட்டம் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு சபைகள் அருட்தந்தை ஜெயந்தன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானை சந்தித்து மனு அளித்தார்.
அதில், இயேசு இறந்த தியாக நாளான புனித வெள்ளி அன்று டெல்லி, கேரளா மாநிலங்கள் போன்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட கோரியும் மேலும், தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டு மது விற்பனை இல்லாத சிறப்பு நாட்களான வள்ளலார், மகாவீரர், மிலாடிநபி சிறப்பு நாட்களோடு புனித வெள்ளி நாளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேண்டுகோள் விடுக்கும் விதமாக அறவழியில் வருகின்ற ஏப்ரல் மாதம் 06.04.2025 ஞாயிறு அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி முன்னிருந்து தொடங்கி வைக்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் விவிடி சிக்னல் பகுதியில் நடைபெறுவதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மாவட்ட கண்காணிப்பாளர் ஆலோசித்து சொல்வதாக கூறினார்கள். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபை தலைவர் ரூஸ்வெல்ட் உடன் இருந்தார்.