தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜபிரபு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முத்தையாபுரம் தோப்பு தெரு ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த குஞ்சரவேல் மகன் உமையார்தங்கம் (25) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் உமையார்தங்கத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட உமையார்தங்கம் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.