கோவில்பட்டியில் தந்தை, மகனைத் தாக்கி 2 செல்போன்கள், ரூ. 2,500 பணத்தைப் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த காந்தி மகன் கருப்பசாமி முடி திருத்தகம் வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சந்தைப்பேட்டை டாஸ்மாக் மதுக்கூடம் அருகே நடந்து சென்றனர். அப்போது, 4 பேர் சேர்ந்து அவர்களை வழிமறித்துத் தாக்கி, 2 கைப்பேசிகள், ரூ. 2,500 ரொக்கத்தைப் பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதில், காயமடைந்த கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.
அதில், வள்ளுவர் நகர் 4ஆம் தெரு ஆறுமுகம் மகன் ஆட்டோ ஓட்டுநரான சரவணன் (29), டிராக்டர் ஓட்டுநர்களான மந்தித்தோப்பு கணேஷ் நகர் சங்கையா மகன் ராம்பிரகாஷ் (25), வடக்கு திட்டங்குளம் பசும்பொன் நகர் முத்துப் பாண்டி மகன் பாலமுருகன் என்ற டக்கர் முருகன் (39), இலுப்பையூரணி நடுத் தெரு கருப்பசாமி மகன் கட்டடத் தொழிலாளியான சிங்கராஜ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்து, செல்போன்களை பறிமுதல் செய்தனர்.