தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், பொன் கார்த்திகா (17) என்ற மகளும், பொன் சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தால் இவர், அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் தனியாக வாழ்ந்து வந்த இவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று (டிசம்பர் 24) காலையில் லட்சுமி மில் பஸ் நிறுத்தம் அருகே ராஜ்குமார் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேற்கு போலீசார் அவரது உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்திருப்பது தெரிய வந்துள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.