கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் கோவில்பட்டி கே. ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே. ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நேற்று மாலையில் தொடங்கியது. கே. ஆர். குழுமங்கள் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் கே. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே. ஆர். அருணாசலம் தலைமை தாங்கினர். நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ். சண்முகவேல் வரவேற்று பேசினார். முதல் போட்டியை தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் பி. ராமசாமி தொடங்கி வைத்தார்.
முதலாவது ஆட்டத்தில் புதுடெல்லி காம்ப்ட்ரோலர் ஆடிட்டர் ஜெனரல் ஆப்
இந்தியா அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதியது. இதில் புதுடெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
விழாவில் கே. ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி. சங்கரநாராயணன், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. காளிதாஸ முருகவேல், கே. ஆர். கல்லூரி முதல்வர் எஸ். மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எ. ராஜேஸ்வரன், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் சம்பத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.