கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் டெல்டா பகுதியில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்காக "பாமணி ஆற்றில் பனைப்பயணம்" எனும் நிகழ்ச்சி நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு எனும் இடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமை வகித்து பனைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர் அக்காலத்தில் எழுத்தறிவு பெறுவதற்கு பனை ஓலைகள் பயன்பட்டன. பொருளாதார முன்னேற்றம் மட்டுமின்றி வாழ்வியலோடு தொடர்புடைய பனை மரங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும். அதிகப்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. திருவாரூர் மாவட்டத்தில் 25 லட்சம் பனை விதைகள் விதைக்க கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இலக்கு நிர்ணயத்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பனை விதைகளை சேகரிக்க பள்ளி கல்வித்துறையின் மூலமாக மாணவர்களும் பனை விதைகளை சேகரிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வேன் என மாவட்ட ஆட்சியர் சந்திரமோகன் உறுதியளித்தார். பனை பயணத்தின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் முதல் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் வரை பனை விதைகளை விதைப்பதற்கான இடம் தேர்வு செய்தல் பனை விதைகளை சேகரித்து வைப்பதற்கான இடங்கள் இப்பகுதியில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் ஒருங்கிணைப்பது பொதுமக்களுக்கு பனை மரத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பயணம் இன்று நடைபெற்றது.