நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் மகன் ஜாகிர் அகமது (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை மற்றும் தாய் இருவரும் துபாயில் வசித்து வரும் நிலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்னையிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஜாகிர் அகமது திட்டச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் வல்லம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 35). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (வயது 24) ஆகிய இருவரையும் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் ஜாகிர் அகமது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 2500 பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.