திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் ஊராட்சியில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் உற்பத்தியை 60 லட்சம் மெட்ரிக் டன் வரை விரிவாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் முன்னிலையில் நடைபெற்றது.
வல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்தால் கிராமம் முழுவதும் சாம்பல் கழிவு மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும், நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீரில் சாம்பல் கழிவுகள் கலந்துவிடும் என்றும், இதனால் பல்வேறு சுவாச கோளாறு நோய்கள் ஏற்படும் என்றும் கூறினர். சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்திய பின்னரே விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் பலர் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி தொகுதி போன்று தற்போது பொன்னேரி தொகுதியும் மாறிவருவதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.