இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 மற்றும் 5-வது வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துக்கு (பிஇஎம்எல்) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
முதல் மெட்ரோ ரயில் வரும் 2026ம் ஆண்டு தயாரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடியில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது.
இந்நிலையில், 3-வது மற்றும் 5-வது வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில்களை ரூ.3,657.53 கோடி மதிப்பில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்புக் கடிதத்தை பிஇஎம்எல் நிறுவனத்துக்கு கடந்த 28ம் தேதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.