திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஓவர்லோடு முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்குக் காரில் வரும்போது, எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி அங்கிருந்த மின்சாரக் கம்பத்தின் மீது மோதியது. இதில் கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து காரின் மீது சாய்ந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காருக்குள் சிக்கியிருந்தவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட மின்வயரில் இருந்து மின்கசிவு ஏற்படாததால் காரை ஓட்டிவந்த சிவில் இன்ஜினியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் கம்பம் சாய்ந்தபோது அந்த வழியாக யாரும் நடந்துசெல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஜோதிநகர் மின்வாரிய பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்கம்பத்தின் மீது மோதிநின்ற காரை வெளியே எடுத்து மின்கம்பத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக சுமார் 4 மணிநேரம் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.