திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், பீரகுப்பம் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார சுகாதார நிலையமாகவும் உள்ளது.
மேலும், இங்கு அனைத்து வகையான நோய்களுக்கும் ரத்தபரிசோதனை செய்யும் ஆய்வகம் இயங்கி வருகிறது. ஆய்வகம் குறுகிய இடத்தில் இயங்கி வருவதால் ஊழியர்கள் சிரமப்படுவதுடன், ரத்த மாதிரிகள் உரிய பாதுகாப்புடன் வைத்துக் கொள்வதற்கு போதிய இடவசதியும் இல்லை.
இதுதவிர, திருத்தணி ஒன்றியத்தில் உள்ள மத்துார், மேல்கசவராஜப்பேட்டை, திருத்தணி நகரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தபரிசோதனைக்காக சேகரிக்கப்படும் ரத்தமாதிரிகளும் பீரகுப்பம் ஆய்வகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், அரசின், 15வது மானிய நிதிக்குழு திட்டம், 2021-- 22ம் ஆண்டின் கீழ், 51. 03 லட்சம் ரூபாய் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகம் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
புதிய கட்டடத்திற்கு தேவையான மின்சாரம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தும், நான்கு மாதங்களாக திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.