சென்னை கே.கே. நகரில் 2-வது தளத்திலிருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (30). 2017-ம் ஆண்டு பேட்ஜ் 2-ம் நிலை காவலரான இவர், செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
செல்வகுமாரும், கே.கே. நகர் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வரும் அவரது சகோதரர் பெருமாள் ராஜ் (38) என்பவரும், கே.கே. நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 20) செல்வகுமார் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பெருமாள் ராஜுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெருமாள் ராஜை தனி அறையில் தள்ளி செல்வகுமார் பூட்டியுள்ளார்.
இதுகுறித்து, பெருமாள் ராஜ், கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வந்ததைக் கண்டு, செல்வகுமார் மற்றொரு அறைக்குள் சென்று, கதவை உள்ளே பூட்டிக்கொண்டார். பின்னர், 2-வது தளத்தில் உள்ள அவரது வீட்டின் பின்பக்க கதவைத் திறந்து, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி கீழே இறங்க செல்வகுமார் முயற்சித்துள்ளார்.
தவறி கீழே விழுந்ததில், மதில் சுவரில் இருந்த கம்பி, அவரது உடலில் குத்தி, ரத்தவெள்ளத்தில் துடித்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.