மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால், 100 கனஅடி உபரிநீர் இன்று திறந்து விடப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்மழை காரணமாகவும், கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.
96 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3, 110 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து மணிக்கு 231 கன அடியாகவும் உள்ளது. இதில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும், சிப்காட் தொழிற்சாலை தேவைக்காகவும் தினமும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 138 கன அடியாக உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் 22 அடியை எட்டியுள்ளதால், முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படும் என்றார்.