ஆவடி அருகே மின்சார ரயிலில் சென்றபடி, ரயில் நிலையத்தின் நடைமேடையில் பட்டாகத்தியை உரசி சென்ற 2 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்ற மின்சார ரயிலின் ஒரு பெட்டியில் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆவடி அருகே இந்து கல்லூரி நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது, மாணவர் ஒருவர் ரயில் பெட்டியின் படிக்கெட்டில் தொங்கியபடி கையில் 2 அடி நீளம் உள்ள பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு நடைமேடையை உரசியபடி சென்றார். அவரை சுற்றி 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்கமிட்டனர்.
இதைப் பார்த்த ரயிலில் பயணம் செய்த பயணிகளும், ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் செயலை பயணி ஒருவர் கைப்பேசி மூலம் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது குறித்து அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படையினர், ஆவடி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து, கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர், ஈக்காடைச் சேர்ந்த அபிஷேக் (20), திருவூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சரண்ராஜ் (20) ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக, திருநின்றவூரைச் சேர்ந்த மனோஜ் (23) என்ற மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்