சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழலில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டலும், அதன் அருகே தனியார் ஏடிஎம் இயங்கி வருகின்றன. நேற்றிரவு ஹோட்டலில் வியாபாரத்தை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்றனர்.
இன்று அதிகாலை தனியார் ஏடிஎம், ஹோட்டல் இரண்டும் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரம், ஹோட்டலில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாயின. ஏடிஎம் மையத்தில் இயந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்ச ரூபாய் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே இயந்திரத்தில் இருந்து தீயில் கருகிய பணத்தின் மதிப்பு தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.