மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கியம்மன் நகரில், 125 குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் இங்குள்ள தெருச் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவை, 14வது நிதிக்குழு மானியத்தில், 9. 60 லட்சம் ரூபாய், நுாறு நாள்
வேலை உறுதி திட்டத்தில், 6. 60 லட்சம் ரூபாய் செலவில் தார் மற்றும் கிராவல் சாலைகள் போடப்பட்டன. மேற்கண்ட சாலைகள் போடப்பட்ட, 20 நாட்களில் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த பகுதிகளில், தார் கழிவுகள் கொண்டு வந்து கொட்டி ஒப்பேற்றினர்.
புதிதாக போடப்பட்டு, 20 நாட்களில் சேதம் அடைந்த மேற்கண்ட சாலைகள், தற்போது, 10 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை சீரமைக்கப்படவில்லை. கிராவல் சாலையில், சரளை கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. தார் சாலை கரடு முரடாக மாறி கிடக்கிறது.
சாலை போட்டும் பயனின்றி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இப்பகுதியில், மற்ற தெருச் சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளன. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.
மேற்கண்ட பகுதியில் புதிதாக போடப்பட்டு சில நாட்களில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கவும், மற்ற சாலைகளை புதுப்பிக்கவும், நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.