திருமழிசை பேரூராட்சி 10வது வார்டுக்குட்பட்ட ஜவஹர் தெருவைச் சேர்ந்த எட்டரை வயது மாணவி ஒருவர், பிரையாம்பத்து அரசு நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு, இரு தினங்களுக்கு முன், 'டெங்கு' பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர், நேற்று, 10வது வார்டுக்கு சென்று, வீடு வீடாகத் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அப்பகுதியில் சுகாதாரத் துறையினருடன் பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து கொசு ஒழிப்பான் இயந்திரம் வாயிலாக கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொண்டனர். பின், வீடுகள் தோறும் பகுதிவாசிகளிடம் தண்ணீரை தேவையில்லாமல் பாத்திரங்களில் தேக்கி வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு, திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, ஜவஹர் தெரு பகுதியில் சுகாதாரத் துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.