தமிழ்நாடு சிட்கோ திருமழிசை, காக்களூர், அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் ரூ. 110. 81 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் இன்று (18. 05. 2023) தமிழ்நாடு சிட்கோவால் திருவள்ளூவர் மாவட்டம், திருமழிசை, காக்களூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய தொழிற்பேட்டைகளில் ரூ. 110. 81 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார்
காக்களூர் தொழிற்பேட்டையில், 475 தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் ரூ. 2. 72 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து தொழிற்பேட்டையின் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பாடதவகையில் கழிவு நிர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்தி, பராமரிப்பு செய்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9, 000 சதுர அடி பரப்பளவில் ரூ. 2. 92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மையக்கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார். அதில் 4, 500 சதுர அடியில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கிற்கான வாடகையினை விரைந்து நிர்ணயித்து தொழில்முனைவோருக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ. 8. 34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், தெரு விளக்குகள், உயர் கோபுர மின் விளக்குகள், கழிவுநீர் குழாய் ஆகிய பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன், மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தில் ரூ. 8. 27 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட எல். இ. டி விளக்குகள் சேதனைக்கூடம், தீ பரவாமல் தடுக்கும் மின்சார கேபிள் சோதனைக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதற்கு முன் திருமழிசை தொழிற்பேட்டையில் ரூ. 6. 81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ. 60. 55 கோடி மதிப்பீட்டில் 1. 31 லட்சம் சதுர அடியில் 112 தொழிற்கூடங்களுடன் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி தொழில் வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தா. மோ. அன்பரசன், தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மின் தூக்கிகள், கனரக வாகனங்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் சாலைப் பணிகள், இங்கு பணிபுரியும் தொழிலார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை நல்ல முறையில் அமைக்க வேண்டும் எனவும், கட்டிடத்தின் தரத்தினை ஒவ்வொரு நிலையிலும் பொறியாளர்கள் உறுதி செய்து திட்டத்தை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறித்தினார்.
மேலும், 1. 21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 29. 47 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் 810 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியினை ஆய்வு மேற்கொண்டு கட்டிடப் பணிகளை காலதாமதம் இன்றி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.