புழல், அறிஞர் அண்ணா நகர், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் மாலதி, 31. இவரது கணவர் கபிலன். இவர்களுக்கு 7, 5, 4வயதில், மூன்று மகன்கள் உள்ளனர். இதில், மூன்றாவது மகன் மாற்றுத்திறன் சிறப்பு குழந்தை. கடந்த 2022ல், புழல் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்ற வீட்டு புரோக்கரின் உதவியுடன் குத்தகைக்கு வீடு தேடி உள்ளார்.
சார்லஸ் மேற்கண்ட முகவரியில், முதல் தளத்தில் உள்ள மார்க் என்பவரின் வீட்டை, 4. 50 லட்சம் ரூபாய்க்கு, குத்தகைக்கு பிடித்து கொடுத்திருக்கிறார். ஓராண்டுக்குப் பின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி வீட்டின் உரிமையாளர் மார்க், இவர்களிடம் 50, 00 ரூபாய் கூடுதலாக வாங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், வங்கிக்கடன் சரிவர கட்டாத காரணத்தால், நீதிமன்ற உத்தரவின்படி அந்த வீடு கடந்த பிப்ரவரி மாதம் 'சீல்' வைக்கப்பட்டது. ஆனால் வீட்டின் உரிமையாளர் மார்க், குத்தகைக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த மாலதி நேற்று காலை 10: 30 மணி அளவில் மூன்று குழந்தைகளுடன், அந்த வீட்டின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த புழல் போலீசார், அவரிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், மார்க் மற்றும் சார்லசை, மீண்டும் விசாரித்து பணத்தை பெற்றுக் கொடுப்பதாக உறுதிஅளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டார்.