தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகின்றது.
இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்தது
இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டு நீரோடைகள் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
தற்போது சுருளி அருவி நீர் பிடிப்பகுதிகளில் மழை பொழிவு குறைந்து நீர் வரத்து சீரானதால், பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு நீர்வரத்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்துவிட்டு மகிழ்ந்து செல்கின்றனர்