திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கீழ ஜெயின் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் (48). செங்கல் அறுக்கும் தொழிலாளி. இவர் 2021-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வெண்ணாற்றங்கரைப் பகுதியில் செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது 12 வயது சிறுமியை இவர் பாலியல் வல்லுறவு செய்தார்.
இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து சிவசங்கரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, சிவசங்கருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 8 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.