தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரத்தில் வீடு புகுந்து நகை திருடிய நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். புதுச்சத்திரம் பிரதான சாலையை சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி சங்கீதா (32). இவரது வீட்டின் கதவு, பீரோவை உடைத்து திங்கள்கிழமை (மார்ச். 10) மர்ம நபர்கள் ஆறரைப் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு காவல் துணைகண்காணிப்பாளர் அருள்மொழி அரசு மேற்பார்வையில் திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெகதீசன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலன் தலைமையிலான குற்றப்பிரிவு காவலர்கள் திருச்சி அரியமங்கலம் வரை உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், சங்கீதா வீட்டில் நகைகளை திருடியவரை அடையாளம் கண்டு திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ள அப்பன்னாநல்லூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல் (37) என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர். இதையடுத்து ராஜ்கமலை திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.