தஞ்சாவூர் அருகே மகளை கேலி செய்ததால் தட்டிக் கேட்ட தந்தை வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே தோட்டக்காடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் எஸ். சத்தியமூர்த்தி (51). கூலித் தொழிலாளி. இவரது மகன் அபிஷேக்கின் (22) பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அபிஷேக்கின் நண்பரான தோட்டக்காடு மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ரூபன் (22) கலந்து கொண்டார்.
அப்போது, அபிஷேக்கின் தங்கையை மது போதையில் இருந்த ரூபன் கிண்டல் செய்தாராம். இதை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டு, ரூபனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடமும் கூறினார். பின்னர், காமராஜ் நகர் தெரு முனையில் நின்ற ரூபனை சத்தியமூர்த்தி கண்டித்தார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் சத்தியமூர்த்தி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து ரூபனை சனிக்கிழமை கைது செய்தனர்.