தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் குழந்தை திருமணத் தடைச்சட்டம் 2006-இன்படி, குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தை திருமணமாகும்.
இத்தகைய திருமணங்களால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, எடை குறைவாக, மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பது, தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைத் திருமணம் நடத்த தூண்டியவர்கள், குழந்தைத் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளிகளாவர்.
இந்தக் குற்றம் புரிந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் திருக்கோயில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவர்களிடம் மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றால் சைல்ட் லைன் அமைப்பை 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.