தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த பெரியகோவிலை சுற்றிலும் பெரிய கோட்டைச்சுவர் அமைந்தள்ளது. இந்த கோட்டைச் சுவரையொட்டி தென்பகுதியில் புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய் ஆறு செல்கிறது. இந்த ஆற்றையொட்டி படித்துறையும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள்இந்த படித்துறையில் இருந்து குளிப்பது வழக்கம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த படித்துறையில் ஏராளமானோர் குளித்தனர். அவ்வாறு மதியம் ஆற்றில் குளிக்க வந்தவர்கள், படித்துறையை ஒட்டி நீரில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது படித்துறையையொட்டி ஒரு உருவம் போன்று தென்பட்டது.
இதையடுத்து, அருகில் சென்று பார்த்த போது அது கருங்கல்லால் ஆன சிலை என்பது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துறை ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையை மீட்டனர். அந்த சிலை 3 அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன அம்மன் சிலை என்பது தெரிய வந்தது தஞ்சை பெரியகோவில் கோட்டை மதில் சுவரில் வரிசையாக கருங்கல் சிலை பதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ஒரு சிலை பெயர்ந்து ஆற்றில் விழுந்து இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.