தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட
முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா. பெரியசாமி,
திமுக விவசாய அணி செயலாளர் ஏ. கே. எஸ். விஜயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும்
டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல்
போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.