தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆகியோர் அறிவுறுத்தலின்படி, உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடுதல், கடற்கரை தூய்மைப்பணி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது.
பேராவூரணி அருகே உள்ள மனோரா பகுதியில் இயற்கை பேரழிவுகளை தடுக்கும் வகையில், கடற்கரை பகுதி சதுப்பு நிலத்தில் அலையாத்திக்காடு உருவாக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன.
புதுப்பட்டினம் கடற்கரையில் குவிந்து கிடந்த நெகிழிக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணியும், விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. வெளிவயல் கிராமத்தில் உள்ள ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனத்தில், 35 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவர் சிவசங்கர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலர் ரமேஷ், கணக்கர் குமார், வருவாய்த் துறையினர், பட்டுக்கோட்டை நண்பர்கள் குழு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலாஜி வரவேற்றார். நிறைவாக மேலாளர் அன்பு நன்றி கூறினார்.