தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பணியாளரிடம் ₹10 லட்சம் மோசடி

546பார்த்தது
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பணியாளரிடம் ₹10 லட்சம் மோசடி
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி பணியாளரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலை செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மகர் நோன்புச் சாவடியை சேர்ந்த தேசிக ராமானுஜம் மகன் பாலாஜி மங்கேஷ்கர் (43). இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கணினி ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தினார்.

அதில் தெரியாத எண்ணில் இருந்து ஆன்லைனில் பகுதி நேர வேலை மூலம் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு கீழே விண்ணப்பம் செய்வதற்கான லிங்க்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. அதை கிளிக் செய்தபோது, தொடர்புக்கு வந்த நபர்கள் ஆன்லைன் பொருட்களை ஆர்டர் செய்யும் டாஸ்க் மூலம் அதிக லாபம் பெறலாம் என கணினி ஆப்ரேட்டரை நம்ப வைத்தனர்.

இதையடுத்து அவருக்கு டெலிகிராமில் ஒரு லிங்க் அனுப்பினர். அதன்மூலம் பல்வேறு தவணைகளாக ரூ. 9 லட்சத்து 94 ஆயிரத்து 270 ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத் தொகை கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

அப்போதுதான் மோசடி நடந்ததை பாலாஜி மங்கேஷ்கர் உணர்ந்தார். இதனையடுத்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி