பட்டுக்கோட்டை: புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

85பார்த்தது
பட்டுக்கோட்டை: புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ச. சன்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் புகையான் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்டவட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் முற்றிலும் காய்ந்து விடும். நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். 

இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும். இதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்கு படும்படி கீழ்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், அல்லது இமிடா குளோப்ரிட் 50 மி.லி, அல்லது குளோரிப்பைரிபாஸ் 500 மி.லி அல்லது ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதவீத தூளைப் பயிரின் அடிப்பகுதியில் படும்படி தூவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி